முல்லா கதைகள் - குட்டி போட்ட பாத்திரம் | Mulla Stories in Tamil

Ads Below The Title
முல்லா கதைகள் - குட்டி போட்ட பாத்திரம்

ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து "என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன்" என்று கேட்டார்.

முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம்.

முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள் கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே?” என வியப்புடன் கேட்டார் முல்லா.

முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக் குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன்” என்றார் அண்டை வீட்டுக்காரர்.

சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார் என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன்” என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா.

சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில் ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார். அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார். முல்லா அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை வீட்டுக்காரரிடம் சென்றார்.

உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள்!என்றார்

“நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க “நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண் பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து விட்டது. தாயும் இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன்” என்றார்.

முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத் திருப்பித் கொடுத்து விடுங்கள்” என்று வேண்டிக் கொண்டார்.

முல்லா அவரடைய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
முல்லா கதைகள் - குட்டி போட்ட பாத்திரம் | Mulla Stories in Tamil முல்லா கதைகள் - குட்டி போட்ட பாத்திரம் | Mulla Stories in Tamil Reviewed by haru on August 18, 2013 Rating: 5

No comments