Ads Below The Title

nermaiyai iru tamil story

நேர்மையாய் இரு!

செந்தில் ஒரு வேலையில்லாத பட்டதாரி. எத்தனையோ நிறுவனங்களில் அவன் நேர்முக தேர்வுக்கு சென்று வந்திருக்கிறான். இதுவரை அவன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறவில்லை. அவனை ஒத்த நண்பர்கள் அனைவரும் ஒரு வேலையில் சேர்ந்து விட்டிருந்தனர். அவர்களை எல்லாம் விட செந்தில் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இருந்தாலும் அவனுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் செந்திலுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தவுடன் செந்திலின் அப்பா சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிப்பார். எந்த நிறுவனத்திலிருந்து தேர்வுக்கான அழைப்பு வந்திருக்கிறதோ, அந்த நிறுவனத்தில் தனக்குத் தெரிந்த யாராவது வேலை செய்கிறார்களா என்று யோசிப்பார். அப்படி யாரேனும் இருந்தால் பையனை அழைத்துக் கொண்டு போய் அவர்களிடம் அறிமுகம் செய்வார்.

தனக்கு தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லையென்றால் தன் நண்பர்களிடம் சென்று விசாரிப்பார். அவர்களுக்கு தெரிந்தவர்கள், அவர்களுடைய உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று கேட்டு தெரிந்து கொள்வார்.

அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சென்று பார்த்து தன் மகனுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். அதனுடன் விட்டுவிடாமல் நேர்முக தேர்வு நடக்கும் போது, “”குறிப்பிட்ட நபரை தனக்கு தெரியும்,” என்று சொல்லுமாறு மகனிடம் கூறி அனுப்புவார்.

செந்திலுக்கு இதிலெல்லாம் இஷ்டமில்லை. இருந்தாலும் அப்பா சொல்வதை அவனால் தட்ட முடியவில்லை.

அடுத்த சில நாட்களில் சென்னையிலிருந்த ஒரு நிறுவனத்திலிருந்து செந்திலுக்கு கடிதம் வந்தது. நேர்முக தேர்வுக்கான கடிதம் அது. வழக்கம் போல செந்திலின் அப்பா சிபாரிசுக்காக ஆள் தேட ஆரம்பித்துவிட்டார். செந்திலையும் கூட்டிக் கொண்டு அலைந்து திரிந்தார். கடைசியில் அவருடைய நண்பருக்கு தெரிந்த ஒருவர் சென்னையில் இருப்பதாகவும், அவர் மனது வைத்தால் செந்திலுக்கு வேலை கிடைக்கும் என்று தெரியவந்தது.

சென்னை சென்று வர நிறைய செலவு ஆகும் என்பதால், தேர்வுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே மகனை மட்டும் சென்னைக்கு அனுப்பினார். சிபாரிசுக்காக சந்திக்க வேண்டியவரை போய் பார்க்குமாறு மகனிடம் கூறினார். செந்திலும் அவருடைய விலாசத்தை வாங்கி வைத்துக் கொண்டான்.

புகை வண்டியில் செந்திலுடன் ஒரு பெரியவரும் பயணம் செய்தார். செந்திலும் அவரும் சிறிதும் நேரத்தில் பேச ஆரம்பித்தனர். “”நேர்முக தேர்வுக்கு முதல் நாள் கிளம்பினால் போதாதா?” என்று கேட்டார். உடனே செந்தில், சிபாரிசுக்காக தான் ஒரு நபரை சந்திக்கப் போவதாக கூறினான்.

“அந்த நபர் சிபாரிசு செய்தால் உனக்கு அந்த வேலை கிடைத்த விடுமா?” என்று கேட்டார் பெரியவர்.

“சிபாரிசு இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்று அப்பா சொல்கிறார்,” என்று இழுத்தான் செந்தில்.

“அப்படியென்றால் உனக்கு வேலை இதற்கு முன்பே, கிடைத்திருக்க வேண்டுமே,” என்று விடாமல் கேட்டார் பெரியவர்.

“எனக்கு பெரிய சிபாரிசு கிடைக்கவில்லை,” என்று சளைக்காமல் பதில் கூறினான்.

”வேலை கிடைப்பதற்கு நான் ஒரு வழி கூறுகிறேன். கேட்பாயா?” என்று கேட்டார் பெரியவர்.

”எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன்,” என்று உற்சாகமாக கூறினான்.

”சிபாரிசுக்காக நான்கு நாட்கள் அலைந்து திரிந்து வீண் செய்வதை விட வேறு விதமாக உழைக்கலாம்,” என்று பெரியவர் கூறினார்.

”எப்படி?” என்று ஆவலுடன் கேட்ட செந்திலை புன்னகையுடன் பார்த்தார் பெரியவர்.

”நிறுவனத்தில் யார் வேலை செய்கிறார்கள் என்று தேடிபிடித்து சிபாரிசுக்காக கெஞ்சி நிற்பதைவிட அந்த நிறுவனத்தை பற்றிய விபரங்களையும், நீ எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்திருக்கிறாயோ அதை பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள நேரத்தை செலவிட வேண்டும்… அதுவும் எப்படி?” என்று கேட்காதே.

“நீ கையில் வைத்திருக்கும் விலாசத்தை கிழித்துப் போட்டுவிட்டு ஒரு பெரிய நூலகத்தை தேடிச் செல்ல வேண்டும். இருக்கின்ற நான்கு நாட்களையும், வீணாக்காமல் நான் சொல்கிறபடி செய்தால் உனக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் பெரியவர்.

நிமிடங்களில் யோசனை செய்து பார்த்தான். “அப்பா சொல்லியபடி இதுவரை நடந்தபோதிலும் வேலை கிடைக்கவில்லை. பெரியவர் சொல்லியவாறு செய்து பார்த்தால் என்ன?’ என்று தோன்றியது.

“”உங்கள் அறிவுரைக்கு நன்றி. நீங்கள் கூறியபடியே நான் செய்கிறேன்,” என்று கூறி பெரியவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

தேர்வுக்கு முன்பிருந்த நான்கு நாட்களையும் நூலகத்தில் செலவிட்டான். நேர்முகத் தேர்வில் நிறுவனத்தை பற்றியும், அவன் பார்க்க போகும் வேலையை பற்றியுமே கேள்விகள் கேட்டனர். செந்தில் நிறைய கேள்விகளுக்கு பதில் கூறினான். தேர்வு நடத்தியவர்களும், “”வெரிகுட்” இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும் முன்பே நிறுவனத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாய். உன்னுடைய ஆர்வத்தை பாராட்டுகிறோம்,” என்று சொல்லி செந்திலை அனுப்பி வைத்தனர். அவர்களுடைய பாராட்டை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அவனுக்கு அப்போதே வேலை கிடைத்துவிட்டதை போல தோன்றியது. உற்சாகமாக ஊருக்கு திரும்பினான்.

அப்பாவிடம் நடந்தவற்றை கூற அவனுக்கு பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. எனவே, அப்பா கொடுத்த விலாசத்தில் இருந்த நபரை சந்தித்ததாக பொய் சொல்லிவிட்டான். சரியாக பதினைந்து நாட்கள் முடிந்தும். அந்த நிறுவனத்திலிருந்து வேலையில் சேருவதற்கான உத்தரவு வந்து சேர்ந்தது. செந்திலுக்கு தலைகால் புரியவில்லை. அப்பாவிடம் ஓடிச் சென்று விஷயத்தைக் கூறினான்.

“இந்த முறை பெரிய சிபாரிசு போல் இருக்கிறது. அதான் வேலை கிடைத்திருக்கிறது,” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

“அப்பா, நீங்கள் நினைப்பது தவறு. நான் உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன்,” என நடந்ததை ஒன்றுவிடாமல் கூறினான் ராஜா. அவனுடைய அப்பா இதுநாள் வரை தன் மகனை தவறான பாதையில் கூட்டி சென்றதை நினைத்து வருத்தப்பட்டார். தன் மகனுக்கு வேலை கிடைக்க காரணமாக இருந்த பெரியவருக்கு மனதார நன்றி கூறினார்.

வேலையில் சேர்ந்த நாளன்று நிறுவனத்தின் முதலாளியை பார்க்க வேண்டும் என்று அவனுடைய மேலதிகாரி கூறினார். முதலாளியின் அறைக்குள் நுழைந்த செந்திலுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவனுடைய முதலாளி வேறு யாருமில்லை, சென்னைக்கு வரும் வழியில் அவனுக்கு அறிவுரை சொன்ன அதே பெரியவர் தான் முதலாளியாக உட்கார்ந்திருந்தார்.

“அய்யா நீங்களா… உங்களது அறிவுரைக்கு மிக்க நன்றி! உங்களால் நான் வாழ்வு பெற்றேன்,” என்று கூறி அவர் காலில் விழுந்தான்.

”நேர்மையாய் இரு என்றும் உயர்வடைவாய்!” என்று கூறினார்.
nermaiyai iru tamil story nermaiyai iru tamil story Reviewed by haru on August 25, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]