Ads Below The Title

kutty elephant tamil story

ஒரு குட்டி யானை பாகன் வெட்டி வைத்த குழியில் அகப்பட்டுக் கொண்டது. அவன் அதைக் கட்டி இழுத்துச் சென்று தன் வீட்டில் ஒரு தூணில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தான். யானைக்குட்டி தன்னை விடுவித்துக் கொள்ள எவ்வளவோ போராடிப் பார்த்தது. ஆனால் சங்கிலி அதன் காலை அறுத்துப் புண்ணாக்கிவிட்டது. பாகன் சிரித்தபடி சொன்னான் , " இனிமேல் நீ என் அடிமை. உன்னால் தப்பவே முடியாது ". குட்டி யானைக்கு அவன் சொன்னது உண்மையென்றே பட்டது.
தப்பிச் செல்லும் முயற்சியைக் கைவிட்டு அடிமை வாழ்வு வாழப் பழகியது. தினமும் பாகன் அந்த சங்கிலியை சுட்டிக்காட்டி, " நீ அடிமை. உன்னால் தப்பவே முடியாது " என்பதையே சொல்லி வந்தான். குட்டியும் அதை முழுமையாக நம்பியது. நாட்கள் ஓடின. குட்டி வளர்ந்து பெரிய யானையானது. அப்போதும் பாகன் அதே வார்த்தைகளை தினமும் சொல்ல அது இன்னும் அடிமையாகவே வாழ்ந்துவந்தது. தப்பிச் செல்ல முயலவே இல்லை.
ஒரு நாள் பாகன் வீட்டில் இல்லாத நேரம் ,கயிற்றை அறுத்துக் கொண்டு மாடு ஒன்று வேகமாக ஓடி வந்து யானை இருந்த இடத்திற்குள் புகுந்தது. நீண்ட தூரம் ஓடிவந்த களைப்பும், பசியும் அந்த மாட்டை வாட்டியது. ஏதாவது கிடைக்குமா என்று தேடி யானை கட்டிக் கிடந்த இடத்திற்கு வந்து விட்டது. யானைக்கு முன்பாகக் கிடந்த புற்களையும் , பச்சை ஓலைகளையும் ஏக்கமாய்ப் பார்த்தது. யானைக்கு அருகே செல்லவும் பயம். மாட்டின் முகத்தில் தெரிந்த பசியை யானை புரிந்துகொண்டது. "சும்மா பயப்படாம கிட்டே வா" என்று கூறி கொஞ்சம் ஓலைகளை அதற்கு முன்பாகப் போட்டது. மாடு வயிறார சாப்பிட்டது. நன்றியுடன் யானையைப் பார்த்துக் கேட்டது, " இவ்ளோ நல்லவனா இருக்கியே, நீ இங்கே என்ன பண்ற? காடுதானே உன் வீடு. அதை விட்டுட்டு இங்கே எதுக்காக இருக்கே? " என்றது.
இதைக் கேட்டதும் யானைக்கு அழுகை வந்துவிட்டது. அது இதுவரை அன்பான சொற்களைக் கேட்டதே இல்லை. காலில் கிடந்த சங்கிலியைக் காட்டிச் சொன்னது, " இந்த சங்கிலி என்னை எங்கேயுமே போக விடாது. இன்னிக்கு காலைல கூட பாகன், நீ ஒரு அடிமை , உன்னால் தப்பவே முடியாதுன்னு சொல்லிட்டுதான் வெளியே போனான். மீறி நான் இழுத்தால் ரத்தந்தான் வரும் " என்றது. இதைக் கேட்டதும் மாடு சிரித்து விட்டது.
"அட ஏமாளியே! இதுதானா உன் பிரச்சினை? என்னைப் பார். உன் உடம்புல பத்தில் ஒரு பங்கு கூட இருக்க மாட்டேன். ஆனா நானே இவ்வளவு மொத்தக் கயிற்றை அறுத்துக்கிட்டு ஓடி வந்துருக்கேன். நீ சின்ன வயசுல கட்டின தம்மாத்தூண்டு சங்கிலிக்கு பயப்படுறியே! நல்லாப் புடிச்சி ஒரு இழு இழு " என்றது. அதைக் கேட்டதும் யானைக்கு கொஞ்சம் பயம் தெளிந்தது. சரி, இழுத்துதான் பாப்போமே என்று இழுத்த அடுத்த நொடியே சங்கிலி நொறுங்கி விழுந்தது. அடடா விடுதலை! உற்சாகமாகக் காடு நோக்கி ஓடியது. அந்த நேரத்தில் வெளியே போயிருந்த பாகன் ஓடி வந்தான், " உன்னால தப்பிக்க முடியாது. நீ ஒரு அடிமை " என்று கத்தினான். அந்த வார்த்தை கேட்டதும் யானை உறைந்து போய் அப்படியே நின்றது. மாடு சொன்னது, " அவன் பொய்யன். அவன் வார்த்தையைக் கேட்காதே. நீ இனி யாருக்கும் அடிமையில்லை. ஓடு " என்றது. யானை ஓடியது. குறுக்கே வந்து தடுத்த பாகனைத் தூக்கி எறிந்து விட்டு ஓடிக் காட்டுக்குள் மறைந்து போனது.
செல்லமே! ஏசப்பாவின் ரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் பாவங்களுக்கும் , சாபங்களுக்கும் எப்போதோ நீங்கலாக்கப் பட்டு விட்டோம். ஆனாலும் பிசாசு நம் பழைய பாவங்களைச் சொல்லி நம்மை அடிமையாகவே வைத்திருக்கப் பார்ப்பான். புரிந்து கொள்.
ஏசப்பாவுக்கு நம் பாவங்கள் தெரியும். இருந்தாலும் அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறார். பிசாசுக்கு நம் பெயர் தெரியும். இருந்தாலும் அவன் நம்முடைய பாவங்களைச் சொல்லி நம்மை அழைக்கிறான்.
" தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர், என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர் ". ஏசாயா 38 :17
kutty elephant tamil story kutty elephant tamil story Reviewed by haru on September 22, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]