nayin theerrnanam tamil story

Ads Below The Title
நாய் போர்வை வாங்கிய கதை தெரியுமா உனக்கு ? தெருவில் வசிக்கும் நாய்கள் குளிர் காலத்தில் நடுங்கியபடி உடலை சுருட்டிக் கொண்டு நடுங்கியபடி படுத்திருப்பதைப் பார்த்திருப்பாய். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அந்த நேரத்தில் அந்த நாய் நினைக்குமாம் ,
" என்ன ஒரு குளிர்! காலைல பொழுது விடிஞ்ச உடனே முதல் வேலையா கடைக்குப் போய் ஒரு நல்ல போர்வை வாங்கணும். இந்த குளிர் பிரச்சினை இன்னையோட முடிஞ்சது. நாளைக்கு ராத்திரிலேர்ந்து ஐயா போர்வையை போத்திக்கிட்டு ராஜா மாதிரி தூங்கப் போறார் பாரு ". விடியும் வரை அடிக்கடி விழித்தெழுந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கும். காலை கண் விழித்து எழுந்ததும் சோம்பல் முறித்து சுற்றிலும் பார்க்கும்.
" வயித்துக்கு எதாவது போட்டுட்டு , நேரா போர்வை விக்கிற கடையிலதான் போய் நிக்கிறோம். நல்ல மொத்தமான போர்வையா பாத்து வாங்கி, இனிமே ராத்திரியில குளிரே இல்லாம கதகதப்பா தூங்குறோம்". சொல்லிக் கொண்டே குப்பைத் தொட்டிக்கு ஓடும். கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு வேற்றுத் தெருவில் உள்ள நாய், இதன் எல்லைக்குள் தென்படும்.
" எவன்டா அவன்? என் ஏரியாவுல என்று சொல்லி உறுமியபடியே அந்த நாயைத் துரத்தி, கடித்து, கடி பட்டு ஒரு வழியாக அதைத் துரத்தி விட்டு,
"யாரு கிட்ட? " என்றபடியே மீண்டும் குப்பைக்கு திரும்பும்.
" ஆஹா ! நல்ல சாப்பாடு. நல்ல ருசி "
சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மீண்டும் வேறொரு புதிய நாய் போட்டிக்கு வரும். மீண்டும் சண்டை, கடிகள். காலை, மதியம், மாலை எல்லாம் குப்பைத் தொட்டியிலும் , சண்டைகளிலும் கழிய , மீண்டும் இரவு வரும். குளிர் வாட்டும். மீண்டும் மனதுக்குள் சொல்லிக் கொள்ளும்

" பொழுது விடிஞ்ச கையோட நல்ல போர்வை வாங்கணும். நாளைலேர்ந்து கதகதப்பா தூங்கணும் . என்ன முக்கியமான வேலையா இருந்தாலும் எல்லாமே போர்வை வாங்கினதுக்கு
அப்புறம்தான் " . மீண்டும் விடியும் குப்பைத் தொட்டி , சண்டை, கடி. மீண்டும் இரவு. அதே தீர்மானம்,
" நாளைக்கு காலைல பாரு. கண்டிப்பா. ......"
வசனம் வாசிக்கையில் , பிரசங்கம் கேட்கையில், இன்னும் சில ஆவிக்குரிய இடுகைகளைக் காணுகையில் தொடப்பட்டு சொல்லுவோமே ,
" ஆண்டவரே! இது எனக்குத்தான். இனி இப்படி செய்ய மாட்டேன், பேச மாட்டேன் , நடந்துக்க மாட்டேன்..... " எத்தனை தீர்மானங்கள் ?
பல சமயங்களில் இவையெல்லாம் அன்றாட வாழ்வுக்குள் நுழைந்ததும் போர்வை வாங்கிய நாயின் கதையாய் முடிவது ஏன்?
இனிமேல் தீர்மானங்களை வைராக்கியமாக நிறைவேற்றுவோமா ?
nayin theerrnanam tamil story nayin theerrnanam tamil story Reviewed by haru on September 22, 2016 Rating: 5

No comments